காரைக்கால் தேற்றரவு அன்னை ஆலயத்தில் ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை (ஆக. 6) நடைபெறவுள்ளது.
காரைக்காலில் நூற்றாண்டுகள் பழைமையான தூய தேற்றரவு அன்னை ஆலயம் உள்ளது. புகழ்பெற்ற இந்த ஆலயத்தில் 10 நாள் நிகழ்ச்சியாக ஆண்டுப் பெருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. நிகழாண்டு 278-ஆம் ஆண்டுத் திருவிழாவாகும். இதையொட்டி, செவ்வாய்க்கிழமை பங்குத் தந்தையர்கள் காலை 6 மணியளவில் திருப்பலி நடத்துகிறார்கள். மாலை 6 மணிக்கு திருப்பலி நடத்தப்பட்டு ஆலய வளாகத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது.
தினமும் காலை, மாலை வேளைகளில் திருப்பலி சிறப்புப் பிரதிநிதிகள் பங்கேற்புடன் நடத்தப்படுகிறது. நிறைவாக ஆகஸ்ட் 15-ஆம் தேதி திருவிழா சிறப்புத் திருப்பலி நடத்தப்பட்டு, தூய தேற்றரவு அன்னை வீற்றிருக்கும் ஆடம்பர தேர் பவனி நடத்தப்பட்டு திவ்ய நற்கருணை ஆசி வழங்கப்படுகிறது. 16-ஆம் தேதி காலை 6.30 மணியளவில் கொடியிறக்கம் செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகத்தினர் செய்துவருகின்றனர்.