ஆடிப்பூரத்தையொட்டி, காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் - ஆண்டாள் சிறப்பு வழிபாடு பெருமாள் கோயிலில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
ஆடிப்பூரத்தையொட்டி, நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் உத்ஸவர் நித்யகல்யாணப் பெருமாள் தாயார் சன்னிதிக்கு எழுந்தருளச் செய்யப்பட்டார். ஏகாசனத்தில் இருந்த நித்யகல்யாணப் பெருமாளுக்கும், ஆண்டாளுக்கும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.
வழக்கத்தை கைவிட்ட கோயில் நிர்வாகம் : ஆடிப்பூரத்தன்று உத்ஸவ பெருமாள், ஆண்டாள் சன்னிதிக்கு எழுந்தருளச் செய்து சேர்த்தி உத்ஸவமாக சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடத்தப்படுவதும், வீதியுலாவில் பெருமாளும், ஆண்டாளும் சேர்ந்து புறப்பாடு நடத்துவதும் வழக்கமான நிகழ்வாகும்.
பகல் 11 மணி முதல் இந்த நிகழ்ச்சிகள் நடைபெறுவது ஒவ்வோர் ஆண்டும் மரபாக இருந்துவந்தது. நிகழாண்டு இந்த நிகழ்ச்சி பகல் நேரத்தில் நடத்தாமல், இரவு நேரத்தில் வெகு எளிமையாக நடத்தி முடிக்கப்பட்டது.