நாட்டு மாட்டு இனங்களை வளர்க்க கால்நடை வளர்ப்பவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என வேளாண் அறிவியல் நிலையத்தினருக்கு புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் அறிவுறுத்தினார்.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு கொம்யூனில் அமைந்துள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் பயிற்சிக்காக வளர்க்கப்படுகின்றன. அத்துடன், காரைக்கால் பகுதியில் உள்ள கால்நடை வளர்ப்பு ஆர்வலர்களை அழைத்து கால்நடை வளர்ப்பு, அதற்கான தீவனம் உற்பத்தி போன்ற இயற்கை முறையிலான செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் அண்மையில் உம்பளச்சேரி இன மாடு உள்ளிட்ட கலப்பின வகையில்லாத நாட்டு மாட்டினங்களைச் சேர்ந்த 10 மாடுகள் வாங்கப்பட்டன.
இந்த மாடுகளை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் அண்மையில் வேளாண் அறிவியல் நிலையத்துக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது, நிலைய முதல்வர் (பொ) ரத்தினசபாபதி, புதிதாக வாங்கப்பட்ட மாடுகள் குறித்தும், கால்நடை வளர்ப்பவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி குறித்தும் விளக்கினார்.
ஆய்வின்போது, புதுச்சேரி மாநிலத்தில் பால் உற்பத்தியை பெருக்க வேண்டியது மிகவும் அவசியம். இதன் மூலம் வெளி மாநிலங்களில் இருந்து பால் வாங்கவேண்டிய நிலை குறையும். பால் உற்பத்தியில் அதிகமான விவசாயிகள் ஈடுபடும்போது, அவர்களிடையே சுய வருமானம் அதிகரிக்கும். மாடுகளிலேயே உம்பளச்சேரி போன்ற நாட்டு மாட்டினங்கள் ஏராளம் உள்ளன.
இவற்றில் கறவை அதிகரிக்கக்கூடிய இனங்களை கண்டறிந்து வாங்கிவந்து, காரைக்கால் பகுதியினருக்கு மாடு வளர்ப்பு குறித்துப் பயிற்சி அளிக்க வேண்டும். கால்நடைகளுக்கு இயற்கையான வகைகளான பசுந்தாள் போன்ற தீவன உற்பத்தியை செய்வதற்கான பயிற்சிகளும் தரவேண்டும் என
அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் அறிவுறுத்தினார்.