மாங்கனித் திருவிழாவையொட்டி அம்மையார் மணிமண்டபத்தில் பல்சுவை கலைநிகழ்ச்சிகள் நடத்தி, கலைஞர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
காரைக்கால் மாங்கனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள் கடந்த மாதம் நடைபெற்றது முதல் அம்மையார் மணிமண்டபத்தில் நாள்தோறும் நாடகம், இசை நிகழ்ச்சிகள், புத்தகம் வெளியீடு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு நிகழ்ச்சியாக, காரைக்கால் இயல் இசை நாடக சபா சார்பில் "மலரும் நினைவுகள்" பல்சுவை நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அமைப்பின் நிறுவனர் கலைமாமணி தங்க.சாத்மீகம் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.யு. அசனா, மாவட்ட துணை ஆட்சியர் (பேரிடர் மேலாண்மை) எஸ். பாஸ்கரன் ஆகியோர் கலந்துகொண்டு, சமூக சேவைகளில் ஈடுபட்டவர்களுக்கும், கலைஞர்களுக்கும் விருதுகளை வழங்கிப் பாராட்டுத் தெரிவித்தனர்.
விழாவையொட்டி, திரைப்பட இயக்குநரும், நடிகருமான ரமேஷ்கண்ணா, பாடல் ஆசிரியர் கவிஞர் விவேகா ஆகியோர் கலந்து கொண்ட "மலரும் நினைவுகள்' பல்சுவை மற்றும் கலை நிகழ்ச்சியை நடத்தினர். காரைக்கால் கைலாசநாதர் கோயில் அறங்காவலர் வாரியத் தலைவர் ஆர்.ஏ.ஆர். கேசவன், துணைத் தலைவர் பி.ஏ.டி. ஆறுமுகம், செயலாளர் எம். பக்கிரிசாமி, பொருளாளர் ரஞ்சன் கார்த்திகேயன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
விழாவில், தஞ்சை தென்னகப் பண்பாட்டு மைய இயக்குநர் பாலசுப்பிரமணியன், கலைப் பண்பாட்டுத் துறை முத்துக்குமரன், சமாதானக்குழு உறுப்பினர் கே. தண்டாயுதபாணி பத்தர், தெய்வசகாயம் ராஜசுந்தரம், இயல் இசை நாடக சபா தலைவர்கள் கந்தசாமி, நிஹால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சபாவின் தலைவர் ஜெரால்டு வரவேற்றார். நிறைவாக துணைத் தலைவர் பாலமுருகன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை பொதுச் செயலாளர் வீரபாண்டியன், துணைத் தலைவர்கள் அறிவழகன், தட்சிணாமூர்த்தி, பொருளாளர் காமராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.