திருவாரூரில் ஆடிப்பூரத் தேரோட்டத்தின்போது, தேரிலிருந்து தவறி விழுந்து இறந்த சிவாச்சாரியாருக்கு திருநள்ளாறில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
திருவாரூர் ஸ்ரீ தியாகராஜர் கோயில் சார்பில் ஆடிப்பூரத்தன்று நடைபெற்ற தேரோட்டத்தின் நிறைவில், தேரிலிருந்து கோயில் சிவாச்சாரியார் முரளி என்பவர் தவழி விழுந்து உயிரிழந்தார்.
இதையொட்டி, திருநள்ளாறில் அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தின் சார்பில் இரங்கல் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. முரளி சிவாச்சாரியார் உருவப் படத்துக்கு, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, சாந்தி பஞ்சகம் மற்றும் மோட்ச பதிகங்கள் பாடப்பட்டன. பின்னர், மோட்ச தீபம் ஏற்றப்பட்டு, சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர். இரங்கல் கூட்டத்துக்கு அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தின் துணைத் தலைவர் ராஜா சுவாமிநாத சிவாச்சாரியார் தலைமை வகித்தார்.
திருவிழாக்கள், தெப்போத்ஸவம், தேர் திருவிழா, தீமிதி திருவிழா போன்ற வைபவங்களில் ஆலயப் பணிகளில் ஈடுபடுவோர் அனைவருக்கும் உரிய பாதுகாப்பு வசதிகளை செய்துத்தர தமிழக, புதுச்சேரி அரசு முன்வரவேண்டும். சிவாச்சாரியார் முரளி குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.3 லட்சம் வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. அவரது குடும்பம் மிகவும் வறுமையில் உள்ளதால், கூடுதல் நிதியுதவி அளிக்க தமிழக அரசு பரிசீலிக்கவேண்டும் எனவும் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மூத்த சிவாச்சாரியார் அய்யாசாமி, சங்கத்தின் காரைக்கால் மாவட்ட செயலாளர் பிரகாஷ் குருக்கள், பொருளாளர் ரமேஷ் குருக்கள் உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.