காரைக்கால் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அடுத்த வாரத்தில் சீருடைத் துணி கிடைத்துவிடும் என முதன்மை கல்வி அதிகாரி வியாழக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து காரைக்கால் முதன்மை கல்வி அதிகாரி அ.அல்லி கூறியது: புதுச்சேரி பிராந்திய பள்ளிகளுக்கு சீருடைத் துணி தரப்பட்டுவிட்டது. காரைக்காலுக்குரிய பள்ளி மாணவர்களுக்கு துணிகள் ஆகஸ்ட் 23-ஆம் தேதி கிடைத்துவிடுமென தகவல் கிடைத்துள்ளது. அடுத்த வாரத்தில் அனைத்து மாணவர்களுக்கும் துணி வழங்கப்பட்டுவிடும். தையல் கூலியையும் வழங்குவதற்கேற்ப கல்வித்துறை விரைவான நடவடிக்கையை எடுத்துவருகிறது. நிகழாண்டு காரைக்கால் பள்ளிகளில் 775 மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டு எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு மட்டுமே புத்தகங்கள் வரவழைக்கப்பட்டு தரப்பட்டன. புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு நாகப்பட்டினம் டெப்போவிலிருந்து வாங்கித்தர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒரு சில நாள்களில் அவர்களுக்கான பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு விடும் என்றார் அவர்.