காரைக்கால் பகுதியில் கொள்ளையடிக்க முயன்ற இருவரை கோட்டுச்சேரி போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் பன்வால் உத்தரவின்பேரில், காவல் கண்காணிப்பாளர் (வடக்கு) வீரவல்லபன் மற்றும் கோட்டுச்சேரி காவல் ஆய்வாளர் ராஜசேகரன், உதவி ஆய்வாளர் குமரவேல் மற்றும் போலீஸார் கோட்டுச்சேரி காவல் சரகத்துக்குள்பட்ட நண்டலாறு ஆற்றங்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சுனாமி நினைவு மண்டபத்தில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் பதுங்கியிருந்த 5 பேர் போலீஸாரை கண்டவுடன் தப்பிக்க முயன்றனர். தொடர்ந்து, போலீஸார் துரத்திச்சென்று 2 பேரை மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில், அவர்கள் காரைக்கால் மற்றும் நாகை மாவட்டம், மயிலாடுதுறை மற்றும் சீர்காழி பகுதியில் கூட்டுக் கொள்ளையில் ஈடுபட திட்டமிட்டிருந்ததும், கடந்த ஜனவரி 9-ஆம் தேதி கோட்டுச்சேரியில் உள்ள மதுக்கடையில் தகராறு செய்ததுடன், சந்திரபாடியைச் சேர்ந்த 3 பேரை தாக்கிவிட்டு தப்பியவர்கள் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கூட்டுக் கொள்ளையில் ஈடுபட திட்டமிட்ட நாகை மாவட்டம், சீர்காழி, சாமிநாதசெட்டியார் தெருவைச் சேர்ந்த மனோகரன் மகன் ராஜா (எ) ராஜதுரை, கச்சேரி சாலையைச் சேர்ந்த வீராசாமி மகன் விக்னேஷ் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து இருசக்கர வாகனம், செல்லிடப்பேசி, கத்தி, 3 இரும்புக் கம்பிகள், மயிலாடுதுறையில் உள்ள விநாயகர் கோயிலில் திருடப்பட்ட வெள்ளி கிரீடம் மற்றும் சில்லறை காசுகள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
தப்பியோடிய நாகை மாவட்டம், சீர்காழி, தென்பாதியைச் சேர்ந்த சாம்சன், விஜய் பிரவின் மற்றும் கடலூர் மாவட்டம், சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம் மகன் அரவிந்த் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.