காரைக்காலில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்ற முகாமில் 124 வழக்குகள் பைசல் செய்யப்பட்டு, ரூ.27 லட்சம் வசூல் செய்யப்பட்டது.
தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தின் உத்தரவின்படி, சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலில், காரைக்கால் மாவட்ட தாலுகா சட்டப்பணிகள் குழுத் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான எஸ். கார்த்திகேயன் தலைமையில் காரைக்காலில் தேசிய மக்கள் நீதிமன்ற முகாம், மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. காரைக்கால் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 230 வழக்குகளும், வங்கிகளில் கடன் பெற்று திரும்பச் செலுத்தாதவர்களுக்கான 182 வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. தேசிய நீதிமன்ற அமர்வில் காரைக்கால் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி எஸ். சிவகடாட்சம், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி வி. ராஜசேகரன், வழக்குரைஞர் எஸ். செல்வகணபதி, டி.வின்சென்ட் ராஜ் ஆகியோர் பங்கேற்று வழக்குகளை விசாரித்தனர். வங்கி மேலாளர்கள், நீதிமன்ற ஊழியர்கள் உள்ளிட்டோர் வழக்குகளில் பங்கேற்றனர். நிறைவாக வங்கியின் நிலுவை வழக்குகள் 230-இல் 104 வழக்குகள் பைசல் செய்யப்பட்டு, ரூ.24.19 லட்சம் வசூல் செய்யப்பட்டது. வங்கியில் கடன் பெற்று திரும்பச் செலுத்தாத நேரிடை வழக்குகள் 182-இல் 20 வழக்குகள் பைசல் செய்யப்பட்டு, இதன் மூலம் ரூ.2.95 லட்சம் வசூல் செய்யப்பட்டதாக தேசிய மக்கள் நீதிமன்றம் சார்பில்தெரிவிக்கப்பட்டது.