காரைக்காலில் நலவழித்துறை சார்பில் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் அன்னை தெரஸா செவிலியர் கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்புடன் நடைபெற்ற இப்பேரணி, அரசு பொதுமருத்துவமனை வளாகத்திலிருந்து புறப்பட்டது. நலவழித்துறை துணை இயக்குநர் மருத்துவர் க.மோகன்ராஜ், அரசு பொதுமருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் மருத்துவர் பி.சித்ரா ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கிவைத்தனர். முன்னதாக, மருத்துவ அதிகாரிகள் பேசும்போது, புகையிலையில் நிகோடின் என்ற அடிமைப்படுத்தும் பொருள் உள்ளது. இது கஞ்சா, அபின் போன்றவற்றைவிட பல மடங்கு அதிக அடிமைப்படுத்தும் திறன் வாய்ந்தது. ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் பேர் இந்தியாவில் புகை பழக்கத்தினால் உயிரிழக்கிறார்கள். புகையிலை பழக்கத்தால் வாய், குரல்வளை மற்றும் நுரையீரல் புற்றுநோய் வர 90 சதவீதம் வாய்ப்பிருக்கிறது. எனவே, பொதுமக்கள், இளைஞர்கள் புகையிலைப் பழக்கத்துக்கு அடிமையாகிவிடாமல் வாழவேண்டும் என கேட்டுக்கொண்டதோடு, இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றனர்.
பல் மருத்துவ அதிகாரிகள் சதீஷ், லாவண்யா, பவித்ரா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். பேரணியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். நகரின் முக்கிய வீதிகளில் கோஷங்கள் எழுப்பியவாறு சென்று மருத்துவமனை அருகே பேரணியை நிறைவு செய்தனர்.
பேரணி ஏற்பாடுகளை நலவழித்துறையின் தொழில்நுட்ப உதவியாளர் சேகர், சுகாதார ஆய்வாளர்கள் ப.ஆண்ட்ரூஸ், கோ.சிவவடிவேல் ஆகியோர் செய்திருந்தனர்.