அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இலவச பாடப் புத்தகங்கள் கிடைக்க கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் அரசு உதவி பெறும் பள்ளிகளின் பெற்றோர் சங்கத் தலைவர் அ. வின்சென்ட் வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரி மாநிலத்தில் கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 10-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஒரே நேரத்தில் பாடப் புத்தகங்கள் அனுப்ப வேண்டிய நிலையில், உதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டும் பாடப் புத்தகம் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. இந்த போக்கை கைவிட்டு அனைத்து பாட நூல்களும் மாணவர்களுக்கு விரைவாக வழங்க கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளிகளில் நிலவும் ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். காரைக்கால் மாவட்டத்தில் 25 சதவீத இலவச கல்விச் சட்டத்தை எந்தவொரு தனியார் பள்ளியும் அமல்படுத்தவில்லை. இதன் மீது கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காரைக்கால் உள் விளையாட்டு அரங்க வெளிப் பகுதியில் விளையாடுவோருக்கு குடிநீர் கிடைக்கவில்லை. மாவட்ட ஆட்சியர் இதன் மீது கவனம் செலுத்தி குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.