காரைக்காலில் இருந்து தமிழகத்துக்கு மோட்டார் சைக்கிளில் 300 லிட்டர் சாராயத்தைக் கடத்த முயன்ற நால்வரை போலீஸார் கைது செய்தனர்.
தற்போது தேர்தல் காலமாக உள்ளதால், காரைக்காலில் இருந்து சாராயம் உள்ளிட்ட மதுபானங்களை தமிழகத்துக்கு கடத்துவது அதிகரித்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த காவல்துறையுடன் இணைந்து தேர்தல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையில் உள்ள சிறப்புக் காவல் படையினர், பறக்கும் படையின் உதவி ஆய்வாளர் பிரவீன், உதவி ஆய்வாளர் குமரவேல் உள்ளிட்டோரை கொண்ட குழுவினர் தீவிர கண்காணிப்பில் மாவட்ட அளவில் ஈடுபட்டுள்ளனர்.
கோட்டுச்சேரி கொம்யூன், கொன்னக்காவலி தமிழக எல்லையோரப் பகுதியிலிருந்து மதுபானம் கடத்தல் நடப்பதாக தகவல் கிடைத்ததையொட்டி, இக்குழுவினர் வெள்ளிக்கிழமை இரவு ரகசியமாக கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 3 மோட்டார் சைக்கிளில் சாக்கு மூட்டைகளை வைத்து நான்கு பேர் கட்டிக்கொண்டிருந்ததைப் பார்த்த போலீஸார், அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது, அதில் 300 லிட்டர் சாராய பாக்கெட்டுகள் இருந்ததும், அவற்றை தமிழக பகுதிக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. அவற்றை கைப்பற்றிய போலீஸார், வரிச்சிக்குடிபேட்டைச் சேர்ந்த ஜேசுதாஸ், சதீஷ், தமிழ்ச்செல்வன், செருமாவிலங்கையைச் சேர்ந்த செல்வம் ஆகிய நால்வரையும் கைது செய்து காரைக்கால் கலால்
துறையினரிடம் ஒப்படைத்தனர்.