பிரமோத்ஸவத்தையொட்டி, மின் அலங்கார சப்பரத்தில் ஸ்ரீ கைலாசநாதர் வீதியுலா நிகழ்ச்சி சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
காரைக்கால் ஸ்ரீசுந்தராம்பாள் சமேத ஸ்ரீகைலாசநாதர் கோயில் பிரமோத்ஸவத்தின் 5-ஆம் நாள் நிகழ்ச்சியாக சனிக்கிழமை காலை பஞ்சமூர்த்திகள் அபிஷேகம் நடைபெற்றது. இரவு நிகழ்ச்சியாக ஸ்ரீசாகம்பரியம்மன் திருக்கயிலையிலிருந்து வந்து சுவாமியை பூஜிக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தொடர்ந்து, ஸ்ரீ கைலாசநாதர் வெள்ளி ரிஷப வாகனத்தில் மின் அலங்கார சப்பரத்தில் வீற்றிருந்தவாறு, வீதியுலா நிகழ்ச்சி தொடங்கியது. அம்பாள், விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேசுவரர் ஆகியோர் தனித்தனி வாகனத்தில் சப்பரத்தில் வீற்றிருந்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு மின் அலங்கார சப்பரத்தை இழுத்துச் சென்றனர். சிறப்பு நாகசுர, மேள வாத்தியங்கள் வீதியுலாவில் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவல் குழுவினர் செய்திருந்தனர்.
தேரோட்டம் : உத்ஸவத்தின் 9-ஆம் நாள் நிகழ்ச்சியாக மார்ச் 20-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
காலை 7 மணிக்கு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு, திரளான பக்தர்கள் சூழ மாட வீதியுலா நடைபெறவுள்ளது. தேரோட்டத்துக்கான பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், காவல்துறையினர் செய்து வருகின்றனர்.