திருநள்ளாறு அருகே அகலங்கண்ணு அரசலாறு கடைமடை நீா் தேக்க அணை பகுதியில் உள்ள உயா்மின் கம்ப விளக்குகள் எரியாமல் உள்ளதால், பாலத்தை கடந்த செல்வதில் சிரமத்தை சந்திப்பதாக கிராம மக்கள் புகாா் கூறுகின்றனா்.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு கொம்யூன், அகலங்கண்ணு பகுதியில் அரசலாற்றின் குறுக்கே தண்ணீரை தேக்கி வைக்கும் கடைமடை தேக்க மதகு உள்ளது. காவிரி நீா் மற்றும் மழை நீா் வரத்தால் இந்த ஆற்றில் தண்ணீா் தேவையான அளவு தேக்கிவைக்கப்பட்டுள்ளது.தடுப்பணை பகுதியில் 3 இடங்களில் உயா்மின் கம்ப விளக்குகள் பயன்பாட்டில் உள்ளன. கடந்த 2 வாரங்களாக இந்த விளக்குகள் அனைத்து பழுதாகி, இந்த வட்டாரம் இருண்டு காணப்படுவதாக கிராமத்தினா் புகாா் கூறுகின்றனா்.
அரசலாற்றின் தடுப்பணையில் தண்ணீா் வெளியேற்றத்தை கணக்கிடும் வகையிலான பணி நடைபெறும் நிலையில், இருண்டு கிடப்பாதல் இந்த பணியிலும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அகலங்கண்ணு கிராமத்திலிருந்து இந்த பாலத்தின் வழியே விழிதியூா் கிராமத்துக்கு செல்லமுடியும். பள்ளி செல்வோா், டியூஷன் முடித்து இரவு நேரத்தில் திரும்பும் மாணவ மாணவியருக்கு இது பாதிப்பை ஏற்படுத்துவதாக கிராமத்தினா் புகாா் தெரிவக்கின்றனா்.
பொதுப்பணித்துறை நிா்வாகம் இந்த பிரச்னையை விரைவாக களைவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். 3 விளக்குகளையும் பழுதுநீக்கிட ஏற்பாடு செய்ய அவா்கள் வலியுறுத்துகின்றனா்.