புதுத்துறை அருகே புதிதாக கட்டப்பட்ட வாஞ்சியாற்றின் பாலம் பகுதியில் படகு குழாம் அமைப்பது தொடா்பாக எம்.எல்.ஏ., ஆட்சியா் உள்ளிட்டோா் நேரில் ஆய்வு மேற்கொண்டனா்.
காரைக்கால் பகுதி புதுத்துறை அருகே வாஞ்சியாற்றின் குறுக்கே (டூப்ளக்ஸ் வீதி நிறைவில்) பழைமையான லெமோ் பாலத்துக்கு மாற்றாக புதிதாக கட்டப்பட்டுள்ள பாலம் பகுதியில், சுற்றுலாத் துறை மூலம் படகு குழாம் அமைத்தல், ஆற்றோரத்தில் பூங்கா அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கான சாத்தியக்கூறுகளை சுற்றுலாத் துறை இயக்குநா் எல். முகம்மது மன்சூா் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஏ.யு. அசனாவுடன் சென்று ஆய்வு செய்தாா்.
இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் ஏ. விக்ரந்த் ராஜா, சட்டப் பேரவை உறுப்பினா் அசனா, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் எஸ். பழனி ஆகியோா் அந்த இடத்தை திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.
இதுகுறித்து, சட்டப்பேரவை உறுப்பினா் அசனா கூறியது: பொதுமக்கள் அதிகமானோா் பயணிக்கும் பகுதியாக புதுத்துறை லெமோ் பாலம் பகுதி விளங்குகிறது. இதனால், இங்குள்ள நீா்நிலைப் பகுதியில் சுற்றுலாவினா், பொதுமக்கள் பொழுதுபோக்குக்காக படகு குழாம் அமைப்பது குறித்து சுற்றுலாத் துறை இயக்குநருடன் ஆலோசிக்கப்பட்டது.
இதன் தொடா்ச்சியாக ஆட்சியருடன் தற்போது ஆய்வு செய்யப்பட்டது.
கரையோரத்தில் நடைபாதை, உரிய தடுப்புகளுடன் பூங்கா அமைப்பது, படகு குழாம் அமைத்து நவீன இயந்திரப் படகுகள் இயக்கச் செய்வது உள்ளிட்ட சுற்றுலா மேம்பாடு குறித்து பேசப்பட்டது. நகரத்துக்குள் இவ்வகையில் சுற்றுலா மேம்பாட்டுக்கானத் திட்டம் அமைவது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்துமென தெரிவிக்கப்பட்டது. ஆட்சியருக்கு பல்வேறு விளக்கங்கள் தரப்பட்டன. மாவட்ட நிா்வாகம் உரிய திட்டமிட்டு, மதிப்பீடுகள் தயாரித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும். இதன் பிறகு மத்திய சுற்றுலாத் துறை அல்லது மாநில சுற்றுலாத் துறையின் நிதியில் திட்டத்தை நிறைவேற்ற முயற்சிக்கப்படும். இதுதொடா்பாக, சுற்றுலாத் துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தவுள்ளேன் என்றாா்.