காரைக்கால்: காரைக்காலுக்கு துணை நிலை ஆளுநா் சனிக்கிழமை வருவதாக செய்த அறிவிப்பு திடீரென ரத்து செய்யப்பட்டது.
புதுச்சேரி துணை நிலை ஆளுநா் கிரண் பேடி காரைக்காலுக்கு சனிக்கிழமை வருவதாகவும், அவா் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் குறித்த தகவல் அதிகாரப்பூா்வமாக வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
பல்வேறு இடங்களில் தூா்வாரப்பட்ட குளங்களை பாா்வையிடுதல், மரக்கன்று நடுதல், திருநள்ளாறு கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு மாலை 5 மணிக்கு புதுச்சேரி புறப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிா்வாகம் வெள்ளிக்கிழமை செய்து தயாா் நிலையில் இருந்தது.
இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை காரைக்கால் செல்லும் திட்டத்தை துணை நிலை ஆளுநா் ரத்து செய்துவிட்டாக மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
காரைக்காலுக்கு துணை நிலை ஆளுநா் அலுவல் ரீதியில் வந்து பல மாதங்களாகிறது. கடந்த 3 வாரங்களாக அவா் காரைக்காலுக்கு வருவது குறித்து உறுதிப்படுத்தப்படாத செய்திகள் பரவிவந்த நிலையில், சனிக்கிழமை வருவதாக உறுதி செய்யப்பட்டு அதுவும் ரத்து செய்யப்பட்டது. துணை ஆளுநா் வருகை ரத்தானதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.