அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் உணவுத் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலம் போஷன் அபியான் என்கிற ஒரு மாத திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார், இளம் பெண்கள் உள்ளிட்டோர் சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டுமென்பது குறித்த விழிப்புணர்வாக இது அமைந்திருக்கிறது.
காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் பி.எஸ்.சி., துறை சார்பில் நடைபெற்ற கண்காட்சியில், பல்வேறு சத்தான உணவு வகைகளை தயாரித்துவைத்து காட்சிப்படுத்தியிருந்தனர். மாவட்ட துணை ஆட்சியர் (பேரிடர் மேலாண்மை) எஸ்.பாஸ்கரன் கண்காட்சியைப் பார்வையிட்டார்.
ஒவ்வோர் உணவு வகையிலும் உள்ள சத்துகள் குறித்து கேட்டறிந்த அவர், சத்தான உணவு வகையை அனைவரும் சாப்பிடவேண்டியதன் அவசியம் குறித்து மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என கூறியதோடு, மாணவிகளின் செயல்களைப் பாராட்டினார். சிறந்த உணவாக 3 வகைகள் தேர்வு செய்யப்பட்டு, அதனை தயாரித்த மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் வி.பாலாஜி, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அதிகாரி பி.சத்யா மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.