வட்டிக்குப் பணம் கொடுத்தது தொடர்பாக, பெண்ணைத் தாக்கிய நான்கு பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
காரைக்கால் பகுதி மேலஓடுதுறை கிராமத்தைச் சேர்ந்தவர் அமுதா (41). இவரது கணவர் வெளிநாட்டில் பணியாற்றிவருகிறார். தமது உறவினரின் தேவைக்காக, நாகப்பட்டினம் பகுதி வெளிப்பாளையத்தை சேர்ந்த கண்ணன் என்பவரது மனைவி எழிலரசியிடம் ரூ. 4 லட்சத்தை வட்டிக்கு வாங்கி, கொடுத்தாராம். பணம் திருப்பித் தருவதில் அமுதாவுக்கும், வெளிப்பாளையத்தைச் சேர்ந்தோருக்கும் பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அமுதாவை சந்திக்க வெளிப்பாளையத்தைச் சேர்ந்த கண்ணன் (39), அவரது மனைவி எழிலரசி (34), இவர்களின் உறவினர்கள் சிவா (34), தமிழ்மணி (26) ஆகியோர் சனிக்கிழமை மேலஓடுதுறை வந்துள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அமுதாவை நால்வரும் சேர்ந்து தாக்கினார்களாம்.
இதுதொடர்பாக அமுதா நிரவி காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், தாக்குதலில் ஈடுபட்ட நால்வரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.