ஊதிய விவகாரம் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, காரைக்கால் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
காரை பிரதேச நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சங்கங்களின் சம்மேளன செயற்குழு கூட்டம் அதன் தலைவர் ஐயப்பன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அரசு ஊழியர் சம்மேளன கௌரவ தலைவர்கள் ஜார்ஜ், ஜெய்சிங், பொதுச் செயலாளர் ஷேக் அலாவுதீன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு உள்ளாட்சித் துறையின் ஊதிய கணக்கின் கீழ் அரசே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும். உள்ளாட்சி ஊழியர்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ள 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை கடந்த 1.1.2016 முதல் எந்தவித நிபந்தனையுமின்றி நிதி பலன்களை வழங்க வேண்டும். 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரையில் உள்ள வீட்டு வாடகைப்படி மற்றும் போக்குவரத்து படியை கடந்த 1.7.2017 முதல் முன் தேதியிட்டு வழங்க வேண்டும். கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக கிராம பஞ்சாயத்துகளில் பணிபுரியும் தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
காலியாகவுள்ள பதவிகளை கணக்கெடுத்து அரசு துறைகளில் உள்ளதுபோல் உள்ளாட்சித்துறை மூலமாகவே மொத்தமாக ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், இதுதொடர்பாக முதல்வர், உள்ளாட்சித் துறை அமைச்சரிடம் நடத்திய பேச்சுவார்த்தையின்படி அரசு நடந்துகொள்ளாததைக் கண்டித்தும், நவம்பர் 4- ஆம் தேதி முதல் காரைக்கால் பகுதியில் உள்ள நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.
முன்னதாக அக்டோபர் 8 முதல் 18- ஆம் தேதி வரை பஞ்சாயத்து அலுவலக வாயிலில் வாயில் கூட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. சம்மேளன துணைத் தலைவர் ஜோதிபாசு வரவேற்றார். துணைச் செயலர் சண்முகராஜ் நன்றி கூறினார்.
துணைத் தலைவர்கள் தங்கராசு, உலகநாதன், துணைச் செயலாளர் திவ்யநாதன், ஓய்வூதியதாரர்கள் நலச் சங்க செயலாளர் வெங்கடாச்சலம் மற்றும் செயற்குழு குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.