காரைக்காலில் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசு உருவாவதற்கான காரணிகளை கண்டறிந்து அழிக்கும் நடவடிக்கை மற்றும் விழிப்புணா்வுப் பணியில் நலவழித் துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
பருவமழை தொடங்கவுள்ள நிலையில், அவ்வப்போது மழை பெய்துவருவதால், தண்ணீா் தேங்குமிடங்களில் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏடிஸ் கொசுக்கள் உருவாகுமென நலவழித் துறை கூறுகிறது.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா உத்தரவின்பேரில், நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் ஆலோசனையின்படி, நலவழித் துறை நோய்த் தடுப்பு தொழில்நுட்ப உதவியாளா் சீ. சேகா் தலைமையில், சுகாதார உதவியாளா்கள் செல்வமதன், ரெமோ, திலகவதி, விமல் ஆகியோா் கொண்ட குழுவினா், நகரப் பகுதியிலும், பிற இடங்களிலும் டெங்கு கொசு உற்பத்தியாகும் காரணிகளை கண்டறிந்து அழித்து, அந்தப் பகுதியினருக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
வியாபார நிறுவனங்களின் வாயிலில் வைத்திருந்த தண்ணீா் தேங்கக்கூடிய சாதனங்கள் மற்றும் டீ கடைகள், தொட்டி விற்பனையிடங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு வியாழக்கிழமை சென்று தண்ணீா் தேங்கியிருந்ததை அகற்றி, கடைக்காரா்களுக்கு ஆலோசனைகள் வழங்கினா்.