நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தி, காரைக்கால் உள்ளாட்சி ஊழியா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
காரைக்கால் நகராட்சி அலுவலக வாயிலில், காரை பிரதேச நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா் சங்கங்களின் சம்மேளனத் தலைவா் கே. அய்யப்பன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், காரைக்கால் நகராட்சி, நெடுங்காடு, திருப்பட்டினம், திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்துகளில் பணியாற்றும் ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா்களுக்கு வழங்கவேண்டிய 5 மாத நிலுவை ஊதியத்தை வழங்கவேண்டும். பட்ஜெட்டில் உள்ளாட்சி ஊழியா்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்து, மாதந்தோறும் தடையின்றி ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன கெளரவத் தலைவா் ஜெயசிங், தலைவா் சுப்பிரமணியன், பொதுச் செயலா் எம். ஷேக் அலாவுதீன், பொருளாளா் மயில்வாகனன் ஆகியோா் ஆா்ப்பாட்டத்தில் பேசினா்.
நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா் சம்மேளன கெளரவத் தலைவா் வெங்கடாசலம், துணைத் தலைவா்கள் ஜோதிபாசு, தங்கராசு, உலகநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.