பிரான்ஸ் நாட்டின் குடியரசு தின விழாவையொட்டி காரைக்காலில் செவ்வாய்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், உலகப் போர் நினைவுத் தூணுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
காரைக்கால் மாவட்ட ஆட்சியரகம் அருகே உலகப்போர் நினைவுத்தூண், போர் வீரர் சிலை நிறுவுப்பட்டுள்ளது. பிரெஞ்சு 231-ஆவது குடியரசு தின விழா காரைக்காலில் கொண்டாடப்பட்டது. காரைக்காலுக்கு வரும் சுற்றுலாவினர், பிரான்ஸ் நாட்டிலிருந்து வருவோர் இந்த பகுதிக்குச் சென்று மரியாதை செய்வதும், புகைப்படம் எடுத்துச் செல்வதையும் வழக்கத்தில் கொண்டுள்ளனர்.
காரைக்காலில் உள்ள ஓய்வு பெற்ற பிரெஞ்சு ராணுவ வீரர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியையொட்டி, ஓய்வு பெற்ற ராணு வீரர்கள், பிரெஞ்சுக் குடியுரிமைதாரர்கள் ஆகியோர் நினைவுத் தூண் அருகே கூடினர். கரோனா பொது முடக்கக் காலமாக உள்ளதால் வழக்கத்தைக் காட்டிலும் மிகக் குறைந்த நபர்களே கலந்துகொண்டனர்.
சிறப்பு அழைப்பாளராக காரைக்கால் வட்டாட்சியர் பொய்யாதமூர்த்தி கலந்துகொண்டு நினைவுத் தூண் மற்றும் போர் வீரர் சிலைக்கு மரியாதை செய்தார். பிரெஞ்சு ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், நினைவுத் தூணுக்கு மலர்வளையம் வைத்து கொடி வணக்கம் செலுத்தினர். ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து நினைவுத் தூண் அமைந்திருக்கும் பகுதியில் அமைக்கப்பட்ட இரு கம்பங்களில் இந்திய தேசியக் கொடியும், பிரெஞ்சு தேசியக் கொடியும் ஒரே நேரத்தில் ஏற்றிவைக்கப்பட்டது. நிகழ்வில் பங்கேற்றோர் ஒருவருக்கொருவர் குடியரசு தின வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டனர்.