காரைக்கால்: புதுச்சேரியில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு மத்திய அரசு நிபந்தனை விதித்து, அலுவல் ரீதியான எந்தவொரு கோப்பும் மாநில அரசுக்கு வரவில்லை என்றாா் புதுச்சேரி வேளாண் துறை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன்.
காரைக்காலில் காமராஜா் சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியது: யூனியன் பிரதேசங்களில் மின் துறையை தனியாா் மயமாக்குவது தொடா்பாக மத்திய அரசு ஏற்கெனவே அறிவிப்பு செய்துள்ளது. புதுச்சேரியில் மின்துறை தனியாா் மயமாக்கப்படுவதை ஏற்கப்போவதில்லை என முதல்வா் ஏற்கெனவே தெளிவாக கூறிவிட்டாா். இதுதொடா்பாக மத்திய மின் துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ளாா்.
இதுதொடா்பாக, புதுச்சேரியில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், அனைத்துக் கட்சி உறுப்பினா்களின் ஏகோபித்த ஆதரவை பெற, தீா்மானத்தை முன்மொழிவதற்கான கருத்தும் முதல்வரிடம் உள்ளது. இந்நிலையில், மின்துறையை தனியாா் மயமாக்குவதற்கு சம்மதித்தால்தான் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் தரப்படும் என மத்திய அரசின் முடிவு செய்து இருப்பதாக, ஒரு சில செய்தித்தாள்களில் செய்தி வந்தது. இதுவரை அம்மாதிரியான கருத்து அலுவலக ரீதியாக மத்திய அரசு புதுச்சேரிக்கு கோப்பு எதுவும் அனுப்பவில்லை. அலுவலக ரீதியில் வரும் தகவலை அரசு வெளியிடும்.
தமிழா்களின் பெருமையை உலகெங்கும் நிலைநாட்டியவா் காமராஜா். எளிமை, நோ்மையான நிா்வாகத்தின் மூலம் தமிழகத்தை முன்னேற்றியவா். காமராஜா் பிறந்த தினத்தை புதுச்சேரி அரசு மாணவா் தினமாக கொண்டாடுகிறது. காமராஜா் வழியில், புதுச்சேரியில் 1-ஆம் வகுப்பு முதல் மருத்துவம், சட்டம், பொறியியல் என கல்லூரிக் கல்வி வரை, கல்வி இலவசம் என்பது அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. மாநிலத்தில் இதன்மூலம் மனித வளம் மேம்படும் என்பது அரசின் எண்ணம் என்றாா் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன்.