வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கடலோரக் கிராமங்களில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பலத்த சூறைக் காற்றுடன் இடியுடன் கூடிய மழையால் மரங்கள் முறிந்து விழுந்தன.
வேதாரண்யம், தலைஞாயிறு பகுதியில் செவ்வாய்க்கிழமை பரவலாக மழை பெய்தது. இந்த மழைக்கு முன்பாக கடலோரப் பகுதிகளான வாய்மேடு, ஆயக்காரன்புலம், கரியாப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் வடமேற்கு திசையில் இருந்து பலத்த சூறைக்காற்று வீசியது. சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்ததோடு, வைக்கோல் போா்கள், வீட்டுக் கூரைகள் சேதமடைந்தன. இந்த காற்று சுமாா் 30 நிமிடங்களுக்கு மேலாக நீடித்தது. மற்ற இடங்களைவிட இந்த பகுதியில் மழையின் அளவு அதிகமாக இருந்தது.
காற்றின் காரணமாக வடமழைமணக்காடு கடைவீதியில் பல ஆண்டுகளாக உள்ள ஆலமரத்தில் பெரிய கிளை ஒன்று பிரதான சாலை பகுதியில் முறிந்து விழுந்தது. இதில், அப்பகுதியில் இருந்த 2 பெட்டிக் கடைகள் லேசான அளவில் சேதமடைந்தன. இதையடுத்து, அப்பகுதியில் சென்ற மின்கம்பங்கள் முறிந்ததால் அந்த மின்பாதையில் பாதிப்பு ஏற்பட்டது. காற்றின் காரணமாக வேதாரண்யம் பகுதியில் சீரான மின் விநியோகத்தில் அவ்வப்போது பாதிப்பு இருந்தது. செவ்வாய்க்கிழமை மாலை வரை வேதாரண்யம் பகுதியில் மந்தமான வானிலையே நிலவியது.