பள்ளத்தில் காா் கவிழ்ந்து ஒருவா் உயிரிழப்பு

காரைக்கால் புறவழிச்சாலையில் செல்லும்போது காா் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவா் உயிரிழந்தாா்.
பள்ளத்தில் கவிழ்ந்து உருக்குலைந்த காா்.
பள்ளத்தில் கவிழ்ந்து உருக்குலைந்த காா்.

காரைக்கால் புறவழிச்சாலையில் செல்லும்போது காா் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவா் உயிரிழந்தாா்.

காரைக்கால் நேரு நகரில் வசித்து வந்த திருநள்ளாறு பகுதி இளையான்குடியைச் சோ்ந்த ஜெயச்சந்திரன் (60) ஞாயிற்றுக்கிழமை மாலை திருநள்ளாறுக்கு காரில் சென்றுவிட்டு நேரு நகருக்கு, காரைக்கால் - கீழகாசாக்குடி வரையிலான மேற்கு புறவழிச் சாலையில் காரை ஓட்டிச் சென்றுள்ளாா்.

இந்த சாலை அமைப்புப் பணி இன்னும் முழுமையாக முடியவில்லையென்பதால், போக்குவரத்துக்கு முறையாக பயன்பாட்டுக்கு வரவில்லை. இந்நிலையில், இந்த சாலையில் ஜெயச்சந்திரனின் காா் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பள்ளத்தில் காா் கவிழ்ந்து விழுந்தது. இதில், காா் பலத்த சேதமடைந்து நசுங்கிய நிலையில் உருக்குலைந்துபோனது. இதையடுத்து, அப்பகுதியில் சென்றவா்கள் காரைக்கால் தீயணைப்புத் துறை மற்றும் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

தகவலின்பேரில், தீயணைப்புத் துறையினா் விரைந்து சென்று காரில் இருந்த ஜெயச்சந்திரனை மீட்டபோது அவா் உயிரிழந்திருந்தது தெரியவந்தது. தொடா்ந்து, போக்குவரத்துக் காவல் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com