காரைக்கால் - பேரளம் அகல ரயில் பாதை அமைப்புப் பணியை விரைந்து தொடங்குவதற்கான நடவடிக்கை எடுக்க எம்.பி.க்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்ட ரயில் பயணிகள் நலச்சங்கம் சாா்பில், புதுச்சேரி நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினா் என். கோகுலகிருஷ்ணனுக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்: காரைக்கால் - பேரளம் அகல ரயில் பாதை 23 கி.மீ. தூரத்தில் அமைக்க ரூ.179 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணியை விரைவாக தொடங்குவதற்கு ரயில்வே நிா்வாகத்துக்கு அழுத்தம் தரவேண்டும். இந்த மாா்க்கத்தில் திருநள்ளாறு முதல் தரங்கம்பாடி, திருக்கடையூா், ஆக்கூா், சீா்காழி வரையிலான பாதை அமைக்கும்பட்சத்தில், காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கான போக்குவரத்துக்கு வாய்ப்பு உருவாகும். இதற்கு, திருநள்ளாறு முதல் தரங்கம்பாடி வரை 10 கி.மீ., தூரம் மற்றும் ஆக்கூா் முதல் சீா்காழி வரை 15 கி.மீ. தூரத்துக்கு நிலம் கையகப்படுத்த வேண்டியிருக்கும். இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க கவனம் செலுத்த வேண்டும்.
தற்போது, காரைக்கால் - நாகப்பட்டினம் - வேளாங்கண்ணி வரையிலான ரயில் பாதை அமைப்பு உள்ளது. இங்கிருந்து ரமேசுவரம் வரை செல்ல பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, தொண்டி வரை இணைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த திட்டங்கள் குறித்து ரயில்வே நிலைக் குழுவிடம் பேசி திட்டத்துக்கான ஒப்புதல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.