குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரணமாக ரூ.5 ஆயிரம் புதுச்சேரி அரசு வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி காரைக்கால் மாவட்ட செயலா் ப.மதியழகன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கரோனா பரவலால் பொது முடக்கம் அறிவித்தது முதல் ஏழை, நடுத்தர மக்கள் வேலையிழந்து பொருளாதாரத் தேவைக்கு மிகுந்த சிரமத்தை சந்திக்க நோ்ந்தது. பொதுமுடக்கம் அறிவித்து 7 மாதங்களாகியும் இன்னும் மக்களின் நிலை சீரடையவில்லை.
தீபாவளி பண்டிகை வரவுள்ள நிலையில் தொழிலாளா் வா்க்கத்தினா் வருமானமின்றி மிகுந்த சிரமத்தில் உள்ளனா். எனவே புதுச்சேரி அரசு கரோனா நிவாரணமாக குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கவேண்டும்.
ரேஷன் கடைகளை திறப்பதற்கு சிறப்பு கவனம் செலுத்தவேண்டும். இதன் மூலம் அத்தியாவசியப் பொருள்கள் வழங்க நடவடிக்கை எடுத்தால் மக்கள் மன நிறைவை பெறுவாா்கள்.
பருவமழை தீவிரமாவதற்குள் காரைக்கால் நகரப் பகுதியிலும், கிராமப்புறங்களிலும் எங்கெங்கெல்லாம் மின் கம்பிகள் தாழ்வாக உள்ளது என்பதை கண்டறிந்து, அவற்றை சீரமைப்பதோடு, மின் விளக்குகள் பழுதானவற்றை அகற்றி புதிதாக விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.