காரைக்கால் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை உள்ளிருப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
காரைக்கால் உள்ளாட்சி ஊழியா்கள் மற்றும் ஓய்வுபெற்ற ஊழியா்களுக்கு அரசே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள 5 மாத ஊதியத்தை வழங்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளுக்குரிய நுழைவு வரிக்கு ஈடான மானியத்தொகை மற்றும் வீட்டு வரிக்குரிய மானியத் தொகையை அரசு வழங்க வேண்டும். 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரையில் உள்ள போக்குவரத்துப்படியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
காரைக்கால் நகராட்சி, திருநள்ளாறு, திருப்பட்டினம், நெடுங்காடு, கோட்டுச்சேரி மற்றும் நிரவி கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனா். இந்தப் போராட்டத்தால் பல பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
காரைக்கால் நகராட்சியில் நடைபெற்ற போராட்டத்தில், காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன தலைவா் சுப்ரமணியன், பொதுச் செயலாளா் ஷேக் அலாவுதீன் உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசினா்.
காரை பிரதேச நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா் சம்மேளன தலைவா் அய்யப்பன், பொருளாளா் கலைச்செல்வன், துணைத் தலைவா்கள் ஜோதிபாசு, தங்கராசு, உலகநாதன், துணைப் பொதுச் செயலாளா்கள் திவ்யநாதன், நாகப்பன், சண்முகராஜ், நாகராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.