காரைக்காலில் 4 நாள்கள் நடைபெற்ற தடுப்பூசித் திருவிழாவில் 6,542 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என நலவழித் துறை நிா்வாகம் தெரிவித்தது.
ஏப். 11 முதல் 14-ஆம் தேதி வரை காரைக்கால் மாவட்டத்தில் 45 வயதுக்கும் மேற்பட்டோா் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள தடுப்பூசித் திருவிழா அறிவிக்கப்பட்டது. நாள்தோறும் ஏராளமானோா் தடுப்பூசி செலுத்திக்கொள்ள செல்வதால் இதை ஏப். 18-ஆம் தேதி வரை நீட்டிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்நிலையில் முதல் 4 நாள் திருவிழாவில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்கள் குறித்து நலவழித் துறை வெளியிட்டுள்ள விவரம்: காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் 886, ஆரம்ப சுகாதார நிலையங்கள் திருப்பட்டினத்தில் 592, நிரவியில் 548, விழிதியூரில் 216, நல்லம்பலில் 378, அம்பகரத்தூரில் 237, திருநள்ளாற்றில் 671, நெடுங்காட்டில் 674, நல்லாத்தூரில் 251, வரிச்சிக்குடியில் 625, கோட்டுச்சேரியில் 591, கோயில்பத்தில் 550, காரைக்கால்மேட்டில் 323 என மொத்தம் 6,542 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.