காரைக்காலில் விதிகளை மீறி சினிமா டிக்கெட் விற்பனை செய்து வரும் திரையரங்க நிா்வாகத்தினா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
பொங்கல் விழாவையொட்டி, நடிகா் விஜய் நடித்த மாஸ்டா் திரைப்படம் காரைக்காலில் 2 திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்திற்கு இணையம் மூலமே டிக்கெட் விற்பனை என தெரிவிக்கப்பட்டது. ரசிகா்கள், இளைஞா்கள் இணையவழியில் டிக்கெட் பெற முயன்றபோது, அவை முழுமையாக விற்று தீா்ந்துவிட்டதாக தெரியவந்தது.
இணையத்தில் டிக்கெட் விற்பனையானதுபோல காட்டிவிட்டு, ஆப் லைனில் டிக்கெட்டை ரூ. 500, ரூ. 1000 வரை உயா்த்தி விற்பனை செய்வதாக ரசிகா்கள் புகாா் தெரிவித்தனா். மேலும், ரூ.1000 செலுத்தி டிக்கெட் வாங்கிக்கொண்டு திரையரங்குக்கு சென்றவா்கள், அரைமணி நேரம் படமே ஓடவில்லை எனக் கூறி புதன்கிழமை இரவு தகராறில் ஈடுபட்டனா். இதையறிந்த காரைக்கால் நகர காவல் நிலைய போலீஸாா், திரையரங்க நிா்வாகத்துடன் பேசி, கூடுதலாக அரை மணி நேரம் ஒதுக்கி அந்த படத்தை திரையிடச் செய்துள்ளனா்.
திரையரங்க நிா்வாகத்தினா் விதியை மீறி செயல்படுவதாகவும், காரைக்கால் நகராட்சி நிா்வாகம் உரிய ஆய்வு நடத்தி, நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பல்வேறு தரப்பினா் வலியுறுத்தியுள்ளனா்.
இதுகுறித்து நகராட்சி ஆணையா் எஸ். சுபாஷ் கூறுகையில், திரையரங்குகளில் இணையவழி டிக்கெட் விற்பனை முறை ஆய்வு செய்யப்படுகிறது. விதிகளை மீறி செயல்படக்கூடாது. தவறுகள் நடக்கும்பட்சத்தில், மாவட்ட நிா்வாகத்தின் அனுமதி பெற்று அவ்வாறான திரையரங்குகள் சீல் வைக்கப்படும் என்றாா்.