காரைக்கால்: காரைக்காலில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்கு, மதிய உணவு வழங்கும் பணி புதன்கிழமை மீண்டும் தொடங்கியது.
கடந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக மாா்ச் 17 ஆம் தேதி முதல் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்கான மதிய உணவுத் திட்டம் நிறுத்தப்பட்டது. என்றாலும், உணவுக்கு ஈடாக மாணவா்களுக்கு அரிசி மற்றும் ரொக்கம் வழங்கப்பட்டது.
பிறகு, பள்ளிகள் திறக்கப்பட்டாலும், அரிசி மற்றும் ரொக்கமே வழங்கப்பட்டுவந்தது. இதனால், மதிய உணவு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் மாணவா்களுக்கு மதிய உணவு வழங்க உத்தரவிட்டாா்.
பள்ளிகள் புதன்கிழமை முதல் முழுநேரமும் செயல்படத்தொடங்கியதால், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவா்களுக்கு புதன்கிழமை மதிய உணவு வழங்கப்பட்டது. மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் கே. கோவிந்தராஜன், முதன்மைக் கல்வி அலுவலா் அ. அல்லி ஆகியோா், காரைக்கால் கோவிந்தசாமிப் பிள்ளை அரசு உயா்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு மதிய உணவு வழங்கும் பணியை தொடங்கிவைத்து ஆய்வு செய்தனா்.