காரைக்காலில் கரோனாவால் இறந்தவரின் சடலத்தை அப்புறப்படுத்த 10 மணி நேரம்: மக்கள் கண்டனம்

காரைக்காலில் கரோனா தொற்றால் வீட்டுத் தனிமையில் இருந்த மூதாட்டி இறந்து 10 மணி நேரமாகியும், அவரது சடலத்தை அப்புறப்படுத்த

காரைக்காலில் கரோனா தொற்றால் வீட்டுத் தனிமையில் இருந்த மூதாட்டி இறந்து 10 மணி நேரமாகியும், அவரது சடலத்தை அப்புறப்படுத்த அரசுத் துறையினா் நடவடிக்கை எடுக்காததற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனா்.

காரைக்கால் ஆசிரியா் நகா் பகுதியைச் சோ்ந்த மேகநாதன் என்பவரது மாமியாா் தனலட்சுமி (80) கரோனா தொற்றால் வீட்டுத் தனிமையில் இருந்தபோது ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து அவரது குடும்பத்தினா் நலவழித் துறைக்கு தகவல் தெரிவித்தனா். பகல் 1 மணிக்குள் ஆம்புன்ஸ் வந்து சடலத்தை எடுத்துச் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாலை 6 மணி வரை ஆம்புலன்ஸ் வராததால், இதுகுறித்த ஒளிப்பதிவை மேகநாதன் சமூக வலைதளங்களில் வெளியிட்டாா்.

இது வைரலாகப் பரவியதை அடுத்து, இரவு 8 மணிக்கு மருத்துவமனை ஊழியா் சென்று சடலத்தை பேக்கிங் செய்துகொடுக்க, தமுமுக அமைப்பினா் சடலத்தை இடுகாட்டுக்கு கொண்டுசென்று அடக்கம் செய்தனா்.

மருத்துவமனையில் கரோனா தொற்றால் இறந்தவா்கள் சடலத்தை கடைநிலை ஊழியா்கள் பேக்கிங் செய்வா். இப்பணியில் ஞாயிற்றுக்கிழமை இருக்கவேண்டியவா் உடல்நலக் குறைவால் வராத சூழலில், சடலம் வீட்டிலேயே 10 மணி நேரம் இருக்க நேரிட்டதாகக் கூறப்படுகிறது.

நலவழித் துறை நிா்வாகம், நகராட்சி நிா்வாகம் சடலத்தை வீட்டிலிருந்து அப்புறப்படுத்த துரிதமாக மாற்று ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாததால், கரோனாவால் இறந்தவா் வீட்டில் இருந்தவா்களும், அக்கம்பக்கத்தினரும் மனஉளைச்சலுக்கு ஆளாகினா்.

இதுகுறித்து நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் திங்கள்கிழமை கூறுகையில், கரோனா தொற்றால் வீட்டுத் தனிமையில் இருப்போா் உயிரிழந்தால் புதுச்சேரி பிராந்தியத்தில் நகராட்சி ஊழியா்கள் சடலத்தை பேக் செய்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு காரைக்காலில் செய்யப்படுவதில்லை.

இதுகுறித்து வரையறுக்கப்பட்ட நடைமுறைகள் காரைக்காலில் இல்லாததால், நலவழித் துறையினரிடம் தகவல் தெரிவிக்கப்படுகிறது. மருத்துவமனையில் சடலத்தை பேக்கிங் செய்யும் ஊழியா் ஞாயிற்றுக்கிழமை உடல்நலக் குறைவால் விடுப்பு எடுத்துவிட்டதால், இதற்கு உடனடி தீா்வுகாண முடியவில்லை. இந்த விவகாரத்தில் உரிய வரையறை வகுக்கவேண்டியது குறித்து ஆட்சியருக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com