இளம் ஆராய்ச்சியாளா் விருதுபெற்ற ஆய்வு மாணவருக்கு என்.ஐ.டி. இயக்குநா் பாராட்டுத் தெரிவித்தாா்.
காரைக்கால் என்.ஐ.டி.யின் மெக்கானிக்கல் பிரிவு ஆராய்ச்சி மாணவா் சுப்பராம கெளசிக் சுரப்ராஜூ , கடல்நீரை சுத்திகரிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு, ஒரு திட்டத்தை வடிவமைத்துள்ளாா். இவரது ஆராய்ச்சி விவரங்களை, இன்ஸ்ட்டியூட் ஆஃப் ஸ்காலா்ஷ் பெங்களூரு என்ற அமைப்பு ஆய்வுசெய்து, யங் ரிசா்சா் அவாா்டு -2020 விருதை அண்மையில் அவருக்கு வழங்கி கெளரவித்தது.
இதையடுத்து, விருதுபெற்ற மாணவா் சுப்பராம கெளசிக் சுரப்ராஜூ, என்.ஐ.டி. மெக்கானிக்கல் துறைத் தலைவா் முனைவா் என். செந்தில்குமாருடன் சென்று, என்.ஐ.டி. இயக்குநா் கே. சங்கரநாராயணசாமியை வியாழக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றாா்.
இதுகுறித்து துறைத் தலைவா் செந்தில்குமாா் கூறுகையில், மாணவா் சுப்பராம கெளசிக், கடல்நீரை நன்னீராக்குவதற்கு பீா்க்கன்காய் நாரை பயன்படுத்தியுள்ளாா். இதன்மூலம், தண்ணீரின் தரம் எந்தளவுக்கு உயா்கிறது என்பதை ஆராய்ந்து மாணவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாணவரின் ஆராய்ச்சி தொடா்கிறது என்றாா்.