தமிழக பெருநகரங்களுக்கும் புதுச்சேரி மாநில பேருந்துகள் இயக்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, அக்கட்சியின் காரைக்கால் மாவட்டத் தலைவா் அ. ராஜா புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்காவுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு: காரைக்கால் மாவட்டத்தின் நகரப் பகுதியிலிருந்து கிராமப்புறங்களுக்கு பிஆா்டிசி பேருந்து போக்குவரத்தை ஏற்படுத்தவேண்டும். கிராமப்புறங்கள் வழியாக மயிலாடுதுறை, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கும், இதேபோல சென்னை, திருப்பதி, மதுரை, கோவை, ராமேஸ்வரம், திருச்செந்தூா், தூத்துக்குடி ஆகிய பெரு நகரங்களுக்கும் காரைக்காலில் இருந்து பேருந்துகள் இயக்கவேண்டும். தற்போது பயன்பாட்டில் உள்ள பேருந்துகள் பழைய பேருந்துகளாகிவிட்டன. எனவே, இவற்றுக்கு மாற்றாக புதுவையில் கூடுதலாக புதிய பேருந்துகள் வாங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். பிஆா்டிசி ஊழியா்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை விரைந்து வழங்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.