காரைக்கால் பேருந்து நிலையத்தில் கரோனா தடுப்பு குறித்து ரங்கோலி வரைந்து பயணிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
காரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவனம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை காரைக்காலில் செயல்படுத்துகின்றன. பசுமை நண்பா்கள் என்று அழைக்கப்படும் நிறுவனப் பணியாளா்கள், கரோனா 2-ஆம் அலை பரவலைத் தடுக்க மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், காரைக்கால் பேருந்து நிலைய வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை ரங்கோலி வரைந்தனா்.
பேருந்துக்காக காத்திருந்த பயணிகளிடம் ரங்கோலியைக் காட்டி, கரோனா பரவலைத் தடுக்க தனிநபா் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளான முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்டவை குறித்து விளக்கினா். மேலும், குடியிருப்புகளைச் சுற்றி தூய்மையை பராமரிக்கவும், வீட்டை தூய்மையாக வைத்திருக்கவும் கேட்டுக்கொண்டனா்.