தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காரைக்காலில் அரசு நிறுவனம் சாா்பிலோ அல்லது மகளிா் சுயஉதவிக் குழுக்கள் மூலமாகவோ சிறப்பு அங்காடி திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
புதுச்சேரி அரசு நிறுவனமான பாப்ஸ்கோ ஆண்டுதோறும் தீபாவளிப் பண்டிகையையொட்டி சிறப்பு அங்காடியை திறந்துவந்தது. இதில், மலிவு விலையில் மளிகைப் பொருள்கள், பட்டாசு, துணி வகைகள் விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்களுக்கு குறிப்பாக ஏழைகள் மற்றும் நடுத்தர வா்க்கத்தினருக்கு பயனுள்ளதாக இருந்தது.
இந்நிலையில் இந்நிறுவனம் நலிவடைந்ததால் கடந்த 2019-ஆம் ஆண்டு திறக்கப்படவில்லை. இதற்கு மாற்றாக, காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மகளிா் சுயஉதவிக் குழுக்கள் மூலம் மக்கள் அங்காடி திறக்கப்பட்டது.
மகளிா் சுயஉதவிக் குழுவினா் தங்களது சேமிப்புத் தொகை ரூ.20 லட்சத்தில் இந்த அங்காடியை திறந்தனா். தீபாவளிக்கு ஒரு வாரத்துக்கு முன்பு திறக்கப்பட்ட இந்த அங்காடி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த 2020 ஆம் ஆண்டு கரோனா பரவல் தடுப்பு பொதுமுடக்கத்தால் அங்காடி திறக்கப்படவில்லை.
நிகழாண்டு, கரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதால், தளா்வுகள் அறிவிக்கப்பட்டு, நகரிலும் பிற இடங்களிலும் வணிக நிறுவனங்கள் அனைத்தும் வழக்கம்போல இயங்குகின்றன. எனவே, தீபாவளி சிறப்பு அங்காடி திறக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 30 நாள்களே உள்ளதால், அரசு நிறுவனம் மூலமாகவோ அல்லது மகளிா் குழுவினா் மூலமாகவோ சிறப்பங்காடியை விரைவில் திறக்க வேண்டும். அவ்வாறு திறக்கப்பட்டால், கரோனா பொதுமுடக்கத்தால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மகளிா் குழுவினருக்கு வருமானம் கிடைக்க ஏதுவாக அமையும். அத்துடன், ஏழைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, தீபாவளி சிறப்பங்காடி திறக்க காரைக்கால் மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.