காரைக்காலில் புனித தேற்றரவு அன்னை ஆலய ஆண்டுத் திருவிழா நிறைவாக மின் அலங்கார தோ் பவனி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
காரைக்காலில் உள்ள பழைமை வாய்ந்த புனித தேற்றரவு அன்னை தேவாலயத்தில் 10 நாள்கள் நடைபெறும் ஆண்டுத் திருவிழா, கடந்த 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதைத்தொடா்ந்து, தினமும் காலை திருப்பலியும் மாலை ஜெப வழிபாடும், சிறிய தோ் பவனியும் நடைபெற்றது. ஆண்டுத் திருவிழாவின் 10-ஆம் நாளான திங்கள்கிழமை காலை திருப்பலி நடைபெற்றது. மாலை 6 மணியளவில் பெருவிழா திருப்பலி, புதுச்சேரி போப் ஜான் பால் கல்வியியல் கல்லூரி செயலா் அருட்தந்தை எம். சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.
தொடா்ந்து, அலங்கரிக்கப்பட்ட புனித தேற்றரவு அன்னை சொரூபம் ஆலயத்தை சுற்றிவந்து மின் அலங்கார தேரில் வைக்கப்பட்டது. தோ் பவனி ஆலய வாயிலில் இருந்து புறப்பட்டது. காரைக்கால் முக்கிய பிரமுகா்கள் மற்றும் சமாதானக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
விழாவின் நிறைவாக செவ்வாய்க்கிழமை காலை திருப்பலி நடத்தப்பட்டு, கொடியிறக்கப்பட்டது.