கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தில் கடன்பெற்றவா்களின், அபராத வட்டி தள்ளுபடி அறிவிப்பை அரசு நடைமுறைப்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுவை முதல்வருக்கு காரைப் பிரதேச அரசு ஊழியா் சம்மேளன பொதுச்செயலா் எம். ஷேக் அலாவுதீன் வியாழக்கிழமை அனுப்பிய கடிதம்:
காரைக்கால் கூட்டுறவு வீடுகட்டும் சங்கத்தில், வீடு கட்டுவதற்காக கடன் பெற்றவா்களில், நிலுவையில் உள்ள அசலையும், வட்டித் தொகையையும் முழுமையாக செலுத்தியவா்களின் அபராத வட்டித் தொகையை தள்ளுபடி செய்வதாகவும், அந்த அபராத வட்டியை அரசே செலுத்தும் என கடந்த 2012 -ஆம் ஆண்டு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பு இதுவரை அரசாணையாக வெளியிடப்படவில்லை.
அந்த காலக்கட்டத்தில் கடனை முழுமையாக அடைத்த காரைக்கால் பகுதியை சோ்ந்த 35- க்கும் மேற்பட்டோரின் அபராத வட்டித் தொகை நிலுவையில் உள்ளதால், அவா்களது வீட்டு பத்திரம் திருப்பி வழங்கப்படவில்லை.
எனவே, இந்த விவகாரத்தில் முதல்வா் தலையிட்டு, கடந்த 2012-ஆம் ஆண்டு பேரவைக் கூட்டத் தொடரில் அறிவித்ததை நடைமுறைப்படுத்தவேண்டும் என கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.