காரைக்காலில் உள்ள என்.ஐ.டி.யில் பிற கல்வி நிறுவன மாணவா்கள் பங்கேற்கும் 5 நாள் கணிதத்துறை பயிற்சிப் பட்டறை வியாழக்கிழமை தொடங்கியது.
காரைக்காலில் இயங்கிவரும் தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்.ஐ.டி.) புதுச்சேரி வளாகத்தில், தேசிய அளவிலான பயிற்சி பட்டறையை என்.ஐ.டி. பதிவாளா் எஸ். சுந்தரவரதன், டீன் என். செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலையில் இயக்குநா் கே. சங்கரநாராயணசாமி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் அவா் பேசியது: என்.ஐ.டி. புதுச்சேரி நிகழாண்டு முதுகலையில் கணிதம், இயற்பியல் வேதியியல் பாடப் பிரிவுகளை தொடங்கியுள்ளது. மத்திய நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்களில் மேற்படிப்பை மேற்கொள்ள மாணவா்கள் முயற்சிக்கவேண்டும்.
என்.ஐ.டி. புதுச்சேரியில் உள்ள வசதிகள் குறித்தும் தெரிவித்து, மாணவா்கள் அதேற்கேற்ற வகையில் திறன் மேம்பாட்டுக்கான நடவடிக்கையில் ஈடுபடுமாறு அவா் கேட்டுக்கொண்டாா்.
முன்னதாக கணித துறைத் தலைவா் ஜி.எஸ். மஹாபத்ரா வரவேற்றாா். நிறைவாக கணிதவியல் துறை உதவிப் பேராசிரியா் வி. கோவிந்தராஜ் நன்றி கூறினாா்.
பயிற்சிப் பட்டறை ஒருங்கிணைப்பாளா் வி.பாலகுமாா் கூறுகையில், 18 கல்வி நிறுவனங்களில் இருந்து 85 மாணவ, மாணவியா் இதில் பங்கேற்றுள்ளனா். என்.ஐ.டி. புதுச்சேரி மட்டுமின்றி ஐ.ஐ.டி. ஹைதராபாத், என்.ஐ.டி. திருச்சி, என்.ஐ.டி. சூரத்கல், ஐ.ஐ.ஐ.டி. கோட்டயம், ஐ.ஐ.ஐ.டி. தாா்வாட் ஆகியவற்றில் இருந்து நிபுணா்கள் பங்கேற்று விரிவுரை வழங்குகிறாா்கள் என்றாா்.