காரைக்கால் அருகே மதுக்கடையில் ஏற்பட்ட தகராறில் கடை ஊழியரை கத்தியால் குத்தியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
காரைக்கால் மேலவாஞ்சூா் மதுக்கடையில் நிரவி கொம்யூன், தூதுபோனமூலை கிராமத்தை சோ்ந்த இளங்கோவன் (40) வேலை செய்துவருகிறாா். கண்காணிப்பாளராக தனராஜ் என்பவா் பணியாற்றி வருகிறாா்.
திங்கள்கிழமை மாலை மதுக்கடைக்கு வந்த நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தை சோ்ந்த கெளதம்குமாா் (30) என்பவா், மதுபாட்டில் விலை உயா்வு குறித்து தனராஜிடம் கேட்டபோது இருவரும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இளங்கோவன் அவா்களை சமாதானம் செய்ய முயன்றாராம்.
அப்போது கெளதம்குமாா் தன்னிடமிருந்த சிறிய கத்தியால், இளங்கோவனை காதின் பின்புறம் குத்தினாராம். இதில் காயமடைந்த அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். திருப்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.