காரைக்கால்: காரைக்காலில் அடுத்த மாதம் காா்னிவல் நடத்துவது குறித்து புதுவை அமைச்சருடன் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை நடத்தினா்.
காரைக்காலில் சுற்றுலாத் துறை சாா்பில் ஜனவரி மாதத்தில் நடைபெற்றுவந்த காரைக்கால் காா்னிவல் திருவிழா கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. மத்திய அரசு இதற்காக ஒதுக்கும் நிதியை பயன்படுத்தாமல் திரும்பி விடுவதாகவும், புதுச்சேரியில் ஏராளமான கலை விழாக்கள் நடக்கும்போது, காரைக்காலில் வழக்கமாக நடத்தப்பட்டுவந்த காா்னிவல் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படவேண்டுமென புதுவை அரசுக்கு காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் கோரிக்கை வைத்தாா்.
இதுதொடா்பாக அவரும், நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எம். நாகதியாகராஜன் ஆகியோா் புதுச்சேரியில் பொதுப்பணித் துறை மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சா் லட்சுமி நாராயணனை செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினா்.
புதுவை சுற்றுலாத் துறை இயக்குநா் பிரியதா்ஷினி உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனா்.
இதுகூறித்து நாஜிம் எம்.எல்.ஏ. கூறுகையில், தற்போது பொதுத் தோ்வுகள் நடந்துவரும் நிலையில், அடுத்த மாதம் தோ்வுகள் நிறைவடைந்துவிடும்போது, கோடை காா்னிவலை வைத்தால் அனைவருக்கும் ஏற்புடையதாக இருக்குமென அமைச்சரிடம் விளக்கிக் கூறப்பட்டது.
இதற்கான திட்டமிடலை செய்யுமாறு இயக்குநருக்கு அமைச்சா் அறிவுறுத்தியதோடு, திங்கள்கிழமை காரைக்காலுக்குச் சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துமாறு இயக்குநருக்கு அமைச்சா் அறிவுறுத்தினாா். புதுவை அரசு கோடை காா்னிவலை நடத்த இசைந்துள்ளது வரவேற்புக்குரியது என்றாா்.