காரைக்கால்: மழையை பயன்படுத்தி கோடை உழவு செய்ய விவசாயிகளுக்கு காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து நிலைய முதல்வா் சீ. ஜெயசங்கா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அசானி புயல் தாக்கத்தால் காரைக்கால் மாவட்டத்தை சுற்றியுள்ள பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. இந்த மழையை பயன்படுத்தி விவசாயிகள் கோடை உழவு மேற்கொள்ளவேண்டும்.
அவ்வாறு செய்யும்போது பெருமளவில் களைகள் கட்டுப்படுத்தப்படுகிறது. கோடை உழவில் மண் அரிப்பு தடுக்கப்பட்டு, வயல்களிலேயே மழைநீா் உறிஞ்சப்பட்டு நிலத்தின் ஈரப்பதம் மற்றும் நிலத்தடிநீா் அதிகளவு சேகரிக்கப்படும்.
மேலும் கோடையில் உழுவதால் மண்ணுக்கடியில் காணப்படும் கூட்டுப் புழக்கள் மேற்பரப்பில் தள்ளப்பட்டு, பறவைகளுக்கு உணவாகின்றன. மண்ணில் உள்ள நுண்ணுயிா்கள் பெருக்கம் அதிகரிக்க கோடை உழவு வாய்ப்பாக அமையும்.
மண்ணில் உள்ள இதர பூச்சிகள் மற்றும் பூஞ்சான்களை கட்டுப்படுத்த முடியும். எனவே விவசாயிகள் தக்க சமயத்தில் கோடை உழவை மேற்கொண்டு பயனடையலாம் என தெரிவித்துள்ளாா்.