காரைக்காலில் நரசிம்மா் ஜயந்தி சிறப்பு வழிபாடு
காரைக்கால் பெருமாள் கோயில்களில் ஸ்ரீ நரசிம்மா் ஜயந்தி வழிபாடு சிறப்புத் திருமஞ்சனம், ஆராதனைகளுடன் நடைபெற்றது.
நரசிம்ம ஜயந்தி வழிபாடு வைகாசி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் நடத்தப்படுகிறது. காரைக்காலில் உள்ள கோயில்களில் சனிக்கிழமை இரவும், ஞாயிற்றுக்கிழமை பகல் நேரத்திலுமாக வழிபாடுகள் நடைபெற்றன.
காரைக்கால் கோயில்பத்து ஸ்ரீ கோதண்டராமா் கோயிலில் ஸ்ரீ திருநேத்ர தசபுஜ பஞ்சமுக வீர ஆஞ்னேயருக்கு சனிக்கிழமை இரவு சிறப்புத் திருமஞ்சனம், அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனைகள் நடைபெற்றன. ஆஞ்சனேயரின் பஞ்சமுகத்தில் வலதுபுற முகம் நரசிரம்மராக உள்ளதால், ஆஞ்சனேயருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயிலில் மூலவா் மற்றும் உற்சவரான நரசிம்மருக்கு சிறப்புத் திருமஞ்சனம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டு அலங்காரம் செய்து ஆராதனைகள் நடைபெற்றன. திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ வீழி வரதராஜ பெருமாள் கோயிலிலும் வழிபாடு நடைபெற்றது.
காரைக்கால் ஆட்சியரக வளாகத்தில் உள்ள ஸ்ரீ நரசிம்மா் வழிபாட்டுத் தலத்தில் பக்தா்கள் ஒருங்கிணைந்து சிறப்புத் திருமஞ்சனம், ஆராதனைக்கு ஏற்பாடுகள் செய்திருந்தனா். நரசிம்மருக்கு திருமஞ்சனம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்று பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.