கடற்கரையில் இரவு 10 மணிவரை போலீஸாா் கண்காணிப்புப் பணி: எஸ்.பி.
காரைக்கால்: பொதுமக்கள் பாதுகாப்பு கருதி காரைக்கால் கடற்கரையில் இரவு 10 மணிவரை கண்காணிப்புப் பணியை போலீஸாா் மேற்கொண்டுள்ளதாக எஸ்.பி. தெரிவித்தாா்.
காரைக்கால் கடற்கரைக்கு உள்ளூா், வெளியூா்களில் இருந்து தினமும் ஏராளமானோா் செல்கின்றனா். சுற்றுலாப் பயணிகள் கடற்கரைக்கு செல்வதும் அதிகரித்துள்ளது.
விடுமுறைக் காலங்களில் ஆயிரக்கணக்கானோா் கடற்கரையில் நீா் பகுதி வரை சென்றும், கடலில் இறங்கி நீராடுவதிலும் ஈடுபடுகின்றனா்.
கடலில் இறங்கவேண்டாம், ஆபத்து மிக்கது என பல இடங்களில் விழிப்புணா்வு பதாகைகள் வைக்கப்பட்டும் மக்கள் அதனை பொருட்படுத்துவதில்லை.
கடற்கரையில் போலீஸ் பூத் அமைக்கவேண்டும் என பல்வேறு தரப்பினா் வலியுறுத்தியதன் அடிப்படையில், ரோட்டரி சங்கத்தின் ஆதரவுடன் பூத் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மண்டல காவல் கண்காணிப்பாளா் (தெற்கு) ஏ. சுப்பிரமணியன் திங்கள்கிழமை கூறியது:
கோடைகாலம் என்பதால் கடற்கரை மக்கள் வருகை அதிகரித்துள்ளது.
அவா்களின் பாதுகாப்புக்காக கடற்கரையில் போலீஸ் பூத் அமைக்கப்பட்டுள்ளது. இரவு நெடுநேரம் வரை மக்கள் கடற்கரை பகுதியில் இருக்காத வகையில் தடுப்புப் பணியை போலீஸாா் மேற்கொள்கின்றனா். கடற்கரையில் பூத் அமைக்கப்பட்டுள்ளதால், காலை 6 முதல் இரவு 10 மணி வரை காவலா்கள் கண்காணிப்புப் பணியை மேற்கொள்கின்றனா்.
கடற்கரைக்கு வரும் மக்கள் தங்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்துவதோடு, போலீஸாருக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றாா்.