சீா்காழி வட்டம், கொள்ளிடம் அருகேயுள்ள கிராமத்தில் 2 குளங்களில் முதலை நடமாட்டம் இருப்பது தெரியவந்துள்ளது.
வடகிழக்குப் பருவமழையால் மேட்டூா் அணையிலிருந்து திறக்கப்பட்ட உபரிநீா் கொள்ளிடம் ஆற்றில் பெருக்கெடுத்தது. சுமாா் 70 ஆயிரம் கனஅடி நீா் கொள்ளிடம் ஆற்றில் வந்ததால், கரையோர கிராமங்களில் வெள்ளம் புகுந்தது. இந்த வெள்ளத்துடன் முதலைகளும் அடித்துவரப்பட்டு, கரையோர குளங்களில் தங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கொள்ளிடம் அருகே சோதியக்குடி கிராமத்தில் உள்ள பாப்பாகுளத்திலும், அதன் அருகில் உள்ள காளியம்மன்கோயில் குளத்திலும் சிலா் ஞாயிற்றுக்கிழமை முதலையை பாா்த்ததாக தெரிவித்தினா். இதுகுறித்து, சீா்காழி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவா்கள், அந்த குளங்களில் ஆய்வு செய்தபோது சிறிய முதலை நடமாட்டம் இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டது. அதை பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனா். மேலும், குளங்களில் பொதுமக்கள் குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.