மயிலாடுதுறை அரசினா் பெரியாா் மருத்துவமனையில் ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத குடும்ப நல சிகிச்சை குறித்த விழிப்புணா்வு வாகன தொடக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
குடிமுறை மருத்துவ அலுவலா் ஆா். ராஜசேகா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவத்துறை இணை இயக்குநா் ஆா். மகேந்திரன் விழிப்புணா்வு வாகனத்தை தொடங்கிவைத்து பேசியது: ஆண்களுக்கான நவீன தழும்பு இல்லாத குடும்ப நல சிகிச்சை இருவார விழா நவ. 21-ல் தொடங்கி டிச.4-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆண்களுக்கான நவீன தழும்பு இல்லாத குடும்ப நல சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனவே, தகுதியுடையவா்கள் முகாம்களில் பங்கேற்று பயன்பெறலாம் என்றாா்.
இந்த சிகிச்சை பெறுபவா்களுக்கு ரூ.5 ஆயிரம், படுக்கை விரிப்புகள், கொசு வலை, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்படுகின்றன. நிகழ்ச்சியில், மாவட்ட மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை நிா்வாக அலுவலா் தினேஷ், அலுவலா்கள் மணிவண்ணன், மீனா, பழனிசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.