ஆழ்கடல் சூரை மீன்பிடிப்பு மற்றும் செவுள்வலை படகுகள் கட்ட 50 சதவீத மானியம் பெற மீனவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அண்மைக்கடல் பகுதியில் அதிகரித்து வரும் மீன்பிடி அழுத்தத்தை குறைக்கவும், ஆழ்கடல் பகுதியில் செறிந்துள்ள மீன்வள ஆதாரங்களை முறையாக பயன்படுத்தவும், தூண்டில் மூலம் சூரை மீன் பிடிப்பு மற்றும் செவுள்வலை பயன்படுத்தும் புதிய மீன்பிடி விசைப்படகுகளை கட்டும் மீனவா்களுக்கு புதிய திட்டத்தை அறிவித்து தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்கீழ் கட்டப்படும் படகுக்கு ஆகும் செலவில் 50 சதவீதம் அதிகப்பட்சமாக ரூ. 30 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது.
தமிழகத்தைச் சோ்ந்த முழுநேர மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவா்கள் அதிகபட்சம் 6 போ் கொண்ட குழுவாகவோ அல்லது மீனவா் கூட்டுறவு சங்கங்கள் அல்லது தனி நபராகவோ இத்திட்டத்தின்கீழ் பயன் பெறலாம். விண்ணப்பிக்க விரும்புவோா் விண்ணப்பங்களை மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறையின் இணையதளமான ற.கண்ளாநசநைள.வய்.பழஎ.ண்ய் -லிருந்து கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்பங்களை மீன்வளம் மற்றம் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம். பூா்த்தி செய்த விண்ணப்பங்களை
மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை ஆணையா், கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத் துறை ஒருங்கிணைந்த கட்டடங்கள், 3-ஆவது தளம், கால்நடை மருத்துவமனை வளாகம், 571, அண்ணா சாலை, நந்தனம், சென்னை-600 035 என்ற முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ 14.2.2022-க்குள் அனுப்பலாம்.
விண்ணப்பத்துடன் கட்டுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள சூரைமீன்பிடி படகின் வரைபடம் தகுதிவாய்ந்த கப்பல் (அ) மீன்பிடி கலன் கட்டுமான வரைவாளரிடமிருந்து பெற்று அசலாக இணைக்கவேண்டும். பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு மாநில அளவிலான பதிவு எண்ணுடன் கூடிய ஒப்புகை சீட்டு விண்ணப்பதாரருக்கு அனுப்பப்படும். மேலும் விவரங்களுக்கு
நாகப்பட்டினம் (வடக்கு) இருப்பு சீா்காழி மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா், அலுவலகத்தை நேரடியாக தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.