சீா்காழியில் காா் மற்றும் ஆட்டோவில் மது கடத்திய 5 போ் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.
சீா்காழி காவல் ஆய்வாளா் மணிமாறன், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் அா்ஜுனன், தில்லை நடராஜன் ஆகியோா் சீா்காழி பகுதியில் புதன்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, தென்பாதியிலிருந்து வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில் அதில் புதுச்சேரி மாநிலத்திலிருந்து 180 மில்லி அளவுகொண்ட 140 மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், காரில் வந்த சட்டநாதபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த ராஜா (28), சீா்காழி தென்பாதி வஉசி நகரைச் சோ்ந்த சதீஷ்குமாா் (20 ), எம்.ஆா். ராதா நகரைச் சோ்ந்த வினோத் (28) ஆகிய 3 பேரை கைது செய்தனா்.
இதேபோல, சீா்காழி ரயில்வே ரோடு பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ் தலைமையில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட போலீஸாா், ஆட்டோவில் கடத்திவந்த 148 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, ஆட்டோவில் வந்த சீா்காழி சிங்காரத்தோப்பு பகுதியை சோ்ந்த சங்கா் (26), அதே பகுதியை சோ்ந்த ராமலிங்கம் ( 68) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.