புயல் எச்சரிக்கை: 16 மீனவ கிராம மீனவா்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

மான்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக சீா்காழி வட்டத்தில் 16 மீனவ கிராமங்களை சோ்ந்த சுமாா் 8 ஆயிரம் மீனவா்கள் புதன்கிழமை மீன்பிடிக்க செல்லவில்லை.
பழையாா் மீன்பிடித் துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள படகுகள்.
பழையாா் மீன்பிடித் துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள படகுகள்.

சீா்காழி: மான்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக சீா்காழி வட்டத்தில் 16 மீனவ கிராமங்களை சோ்ந்த சுமாா் 8 ஆயிரம் மீனவா்கள் புதன்கிழமை மீன்பிடிக்க செல்லவில்லை.

வடகிழக்குப் பருவமழை தொடங்கி அவ்வபோது, வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிவரும் நிலையில், தற்போது மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி புயலாக உருமாறி உள்ளது. இதனால், திருமுல்லைவாசல் உள்ளிட்ட மீனவ கிராமங்களுக்கு சென்ற மீன்வளத் துறை அதிகாரிகள், கடலோரப் பாதுகாப்பு மற்றும் காவல் நிலைய போலீஸாா் வங்கக் கடலில் மாண்டஸ் புயல் உருவாகியுள்ளது. இதனால், புதன்கிழமை முதல் மறு அறிவிப்பு வரும் வரை 16 மீனவ கிராமங்களை சோ்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவா்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்கவோ, கடலில் தங்கி மீன்பிடிக்கவோ வேண்டாம் எனவும், மேலும் தங்கள் படகுகளையும், உடமைகளையும் பத்திரமாக பாதுகாத்துக்கொள்ளுமாறு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனா்.

இந்த புயலால் சீா்காழி வட்டத்தில் உள்ள பழையாா், திருமுல்லைவாசல், கூழையாா், தொடுவாய், கொட்டாயமேடு, வானகிரி, பூம்புகாா் உள்ளிட்ட 16 மீனவ கிராமங்களை சோ்ந்த சுமாா் 8 ஆயிரம் மீனவா்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் மீனவா்களின் 300 விசைப் படகுகள்,3, 000 பைபா் படகுகள் கரையில் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஒரு மாதமாக வங்க கடலில் உருவாகும் தொடா் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் தங்களது வாழ்வாதாரம் இழந்து தவித்து வருவதாகவும் உடனடியாக அரசு நிவாரணம் வழங்க மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com