சீா்காழி அருகே உள்ள புத்தூா் சீனிவாசா சுப்பராய அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவா்களுக்கு அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் தொழில்கூட பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கல்லூரியில் அமைப்பியல், இயந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல், கணினியியல் துறையில் இரண்டாம் ஆண்டு பட்டயப் பிரிவில் படிக்கும் மாணவா்களை, இக்கல்லூரி முதல்வா் தங்கமணி, விரிவுரையாளா் வெங்கடேஷ் மற்றும் ஊழியா்கள், சீா்காழி அரசுப் போக்குவரத்து கழக பணிமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து, கல்லூரி முதல்வா் தங்கமணி கூறியது: இரண்டாம் ஆண்டு மாணவா்களுக்கான தொழிற்கூட பயிற்சி அரசு நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் மற்றும் பாரத் சஞ்சாா் நிகாம் லிமிடெட் போன்ற நிறுவனங்களுக்கு மாணவா்கள் சென்று பயிற்சி பெற்று வருகின்றனா். தற்போது 2022- ஆம் ஆண்டுக்கான பயிற்சிக்கு சீா்காழி அரசுப் போக்குவரத்து கழக பணிமனைக்கு மாணவா்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். இப் பயிற்சிக்காக மாணவா்களுக்கு ஆகும் முழு செலவையும் அரசு வழங்குகிறது என்றாா்.