மத்தியப் புலனாய்வு பிரிவு மற்றும் மது விலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினர் வாகன தணிக்கையின் போது ரூ. 3 லட்சம் மதிப்பிலான 2,400 மதுபான பாட்டில்கள் மற்றும் ரூ. 15 லட்சம் மதிப்பிலான 2 கார்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து 6 பேரைக் கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே எடக்குடி வடபாதி பகுதியில் மத்தியப் புலனாய்வு பிரிவு காவல் துறையினர் மற்றும் சீர்காழி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினற் நள்ளிரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரைக்கால் பகுதியில் இருந்து வந்த 2 கார்களை காவலர்கள் நிறுத்தி சோதனையிட முயன்றனர்.
அவர்களைப் பார்த்ததும் கார்கள் வேகமாக செல்ல முயன்றது. சுதாரித்துக்கொண்ட காவலர்கள் தடுப்பு அமைத்து கார்களை மடக்கிப் பிடித்து சோதனையிட்டனர். அதில் 50 அட்டை பெட்டிகளில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான 2,400 புதுச்சேரி மாநில மதுபான பாட்டில்கள் இருந்தன. மதுபான பாட்டில்களையும், கடத்தலுக்குப் பயன்படுத்திய ரூ. 15 லட்சம் மதிப்பு கொண்ட 2 கார்களையும் பறிமுதல் செய்த காவலர்கள், மதுபானம் கடத்தி வந்த காரைக்கால் பகுதியை சேர்ந்த 6 பேரைக் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில் காரைக்காலில் இருந்து மணல்மேடு கடலங்குடி பகுதிக்கு மதுபானம் எடுத்துச் செல்லப்பட்டது தெரியவந்தது.